Loading . . .




உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பால பணி 50 சதவீதம் நிறைவு அதிகாரி தகவல்

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ.6 கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகளில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகளான கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. மேலும், உக்கடத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,உக்கடம் -ஆத்துப்பாலம் இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,உக்கடம் மேம்பால பணிகளில் கூடுதல் ஆட்களை நியமித்து இரவு மற்றும் பகல் நேரங்களில் பணி புரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முடியும். கேரளா மற்றும் பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்கள் செல்வோர் இந்த மேம்பால பணிகளால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது என்றனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News