Loading . . .




சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

The Forecast 3 years ago சேலம்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .எஸ். சிவசண்முகராஜா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (22.12.2022) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர் / நிர்வாக இயக்குநர் திரு.எஸ். சிவசண்முகராஜா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வளர்ச்சித் திட்டங்கள் முறையாக செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைகளைக் கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் அரசின் திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் இன்றைய தினம் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் மற்றும் புனரமைக்கும் அமிர்த குளம் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பட்டா வழங்குவதற்காக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும், இ-சேவை மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வித் திட்டம், காலை உணவுத் திட்டம் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர் / நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சிவசண்முகராஜா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, இன்றையதினம் சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.652.84 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகள், இடங்கணசாலை நகராட்சி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி மற்றும் சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம்  செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருவது குறித்தும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஜல் ஜீவன் இயக்கம் திட்டத்தின் மூலம் கல்பாரப்பட்டி ஊராட்சி, கே.புதுப்பாளையம் அருந்ததியர் காலனியில் ரூ.5.89 இலட்சம் மதிப்பீட்டில் 109 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர் / நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சிவசண்முகராஜா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டம் மற்றும் ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.வாகி சங்கீத் பல்வந்த்,இ.ஆ.ப., அவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


0 Comments

Post your comment here

சேலம் Relateted News