சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா தலைமையில் நடைபெற்றது
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 520 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 18 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
மேலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,600/- மதிப்பிலான சக்கர நாற்காலிகள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,050/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,750/- மதிப்பிலான காதொலிக் கருவிகள் என மொத்தம் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,09,200/- மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.முருகன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments