கோவை - மதுரை விரைவு ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கம்
கோவை, டிச. 27 கோவை - மதுரை விரைவு ரயிலின் இயக்கப்படும் வேகம் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழித்தடத்தில் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்குமாறு, பயணிகள் தரப்பில் தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கை காரணமாக, இந்த ரயிலின் வேகம், திண்டுக்கல் - பழநி இடையே மணிக்கு 75 கிலோ மீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகமாகவும், பழநி - பொள்ளாச்சி இடையே மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகமாகவும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள், சிறந்த கட்டமைப்புகளால் ரயிலின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ரயிலின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, முன்பு மதுரையில் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு, கோவையைச் சென்றடையும் மதுரை - கோவை விரைவு ரயில், மதுரையில் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, 30 நிமிடம் முன்பாகவே பிற்பகல் 12.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இதேபோல், கோவையில் பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரைக்கு சென்றடையும் கோவை - மதுரை விரைவு ரயில் கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக 2.40 மணிக்கு புறப்பட்டு, வழக்கமாகச் சென்றடையும் 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும். வேகம் அதிகரிக்கப்பட்டு, நேரம் மாற்றப்பட்டாலும், இந்த ரயில் வழக்கமாக நின்று செல்லும் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பத்துரை, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல் நகர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments