கோவை, பிப். 10: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆதிதிராவிடர் பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இணையவழி பதிவேற்றம் செய்வது தொடர்பான கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் 274 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 24 ஆயிரம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கு 2022-23ம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இணையவழி பதிவேற்றம் செய்வது தொடர்பான கூட்டம் கல்லூரி முதல்வர்கள், பொறுப்பு அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், உயர்கல்வித்துறை அலுவலர்கள், ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகள் ஆகியோர்களுடன் நடைபெற்றது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற https://tnadtwscholarship.tn.gov.in என்ற புதிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மாணவர்கள் அவர்களது கல்லூரியிலேயே கல்வி உதவி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை பெற குறைந்த அளவிலான மாணவர்களே விண்ணப்பித்துள்ளதால், அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கிராந்தி குமார் பாடி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இக்கூட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செல்வன், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் பழனிசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments