கோவை, பிப்.10: சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஜனாதிபதி கோவைக்கு வர உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி மாலை கோவைக்கு வருகிறார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக வரும் இவர், கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக ஈஷா யோக மையத்துக்கு செல்வார் என தெரிகிறது. மகா சிவராத்திரியையொட்டி கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு செல்கிறார். அங்கே ஆதியோகி சிலை முன் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். அன்றைய தினம் இரவு ஈஷா யோக மையத்தில் தங்கிறார்.
விழா முடிந்து மறுநாள் அதாவது 19ம் தேதி காலை காரில் புறப்பட்டு விமான நிலையம் சென்று அங்கேயிருந்து புதுடெல்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி பயணம் செய்யும் பாதைகளில், சுமார் 35 கிமீ தூரத்திற்கு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். விழா நடக்கும் ஈஷா யோக மையத்தில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
ஜனாதிபதி கோவைக்கு வரும் முன் மதுரை சென்று அங்கே மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண திட்டங்களை தயார் செய்யும் பணி நடக்கிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக கோவை வரவுள்ளதால் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான பாதுகாப்பு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஜனாபதி வருகையையொட்டி வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் பல்வேறு வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது
0 Comments