Loading . . .




பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க உத்தரவு மாநகராட்சி கமிஷனர், நெடுஞ்சாலை, குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப். 18 கோவை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி இணைக்கப்பட்டன. அப்போது, பழைய, புதிய வார்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. ஏற்கனவே, மாநகராட்சியின் பழைய வார்டுகளில் ஒன்றிய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2009-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கப்பட்டு 99 சதவீதம் முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட இணைப்பு பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நிறைவேற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, இணைப்பு பகுதிகள் 7 பிரிவாக பிரிக்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக, குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் 87 முதல் 100 வார்டுகள் வரை உள்ள பகுதிகளில் ரூ.442 கோடி மதிப்பில், 435 கி.மீ தூரத்துக்கு பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக 30 இடங்களில் கழிவுநீரேற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில் ரூ.50 கோடி மதிப்பில் தினமும் 30 எம்எல்டி அளவுக்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கோவை போத்தனூர் நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் இப்பணியை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப்புடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பலர் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். இப்பணியை, விரைவாகவும், தரமாகவும், முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினர். மேலும், பாதாள சாக்கடை பணி முடிவுற்ற இடங்களில், தார்ச்சாலை சீரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ளவும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்

0 Comments

Post your comment here

கோவை Relateted News