கோவை, பிப். 25 கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
கோவையில் இருந்து கனிமவளங்கள் சூறையாடப்படுகின்றன. தினமும் 1600 க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கனிமவளத்துறையில் கேட்டால் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
இப்போது தடுக்கவில்லை என்றால் கோவையில் நிலநடுக்கம் வரும். விவசாயம் அழியும்.
கேரளாவில் இருந்து மண், கல் போன்றவற்றை இவ்வாறு எடுக்க முடியுமா? கனிமவளங்கள் இவ்வாறு தமிழகத்தில் எடுப்பது தொடர் கதையாகி வருகிறது.
கனிமவளங்கள் கொள்ளை குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை கேட்டால் விவசாயிகளை அவர்கள் மிரட்டுகின்றனர். அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் எல்லைப்பகுதியில் கனிமவளங்களை கொள்ளை அடித்து செல்லும் லாரிகளை விவசாயிகள் மறிப்போம். கனிமவள கொள்ளையை தடுக்க விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் செய்வோம். கேரளாவுக்கு காய்கறிகள் கொடுக்கிறோம். கேரளாவுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். அனுமதிக்கப்பட்ட அளவே கனிமவளங்கள் கொண்டு செல்ல வேண்டும். விரைவில் கனிமவளக் கொள்ளையை தடுக்க கோரி தமிழக - கேரளா மாநில எல்லைகளில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது துணை தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
0 Comments