கோவை, மார்ச் 12 கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவள கடத்தலை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை எட்டிமடை பிரிவு பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி தலைமை தாங்கினார். துனைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
கனிம வளத்துறை அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கிராவல், ஜல்லி, எம்.சாண்ட், போல்டர் ஆகியவை ஒரு யூனிட்டுக்கு 400 ரூபாய் என வசூல் செய்யப்படுகிறது.
அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய கனிமவள அனுமதிச்சீட்டுக்கு தொகை செலுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை கனிமவளத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள இயற்கை வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குவாரிகளில் வெடி வைப்பதாலும், பெரிய கனரக வாகனங்கள் பெருமளவில் கிராமப்புற சாலைகள் வழியாக செல்வதாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வனப்பகுதியை ஒட்டி கனிம வளங்கள் அதிக அளவில் எடுக்கப்படுவதால் வனவிலங்குகள் பாதிப்பு அடைகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments