Loading . . .




கொடநாடு கொலை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

The Forecast 3 years ago கோவை

ஊட்டி, மார்ச் 23கொடநாடு கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் கோர்ட்டில் நேற்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஏப்ரல் மாதம் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அக்கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் முதலில் இருந்து துவங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினார். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகினர்.

அரசு வக்கீல் ஷாஜகான் வாதிடுகையில், இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன் இவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News