Loading . . .




கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு-கலெக்டர் பேச்சு

The Forecast 3 years ago கோவை

கோவை, மார்ச் 30: கோவையில் தமிழக அரசு இசைக்கல்லூரியில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழாவினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வ.கோபாலகிருஷ்ணன், தமிழக அரசு இசைக்கல்லூரி முதல்வர் (பொ) ஏ.வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் வண்ணாமடை ஆர்.டி.ஜெயபாலன், நஞ்சைகவுண்டர்புதூர் ஏ.பார்த்திபன், கோட்டூர் என்.ஜெயப்பிரகாஷ், சரவடி ஜி.பிரகாஷ் ஆகியோரின் நாதஸ்வரம் தவில் இசையும், மைதிலி கிருஷ்ணன் (வீணை), எஸ்.சபரீஸ்வரன் (மிருதங்கம்), பொன்னாபுரம் ஆர்.தர்மராஜ் (கஞ்சிரா) ஆகியோரின் வீணை இசையும் நடைபெற்றதை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:

ஒரு சமூகத்தில் உள்ள கலைகளை பொறுத்துதான் அந்த சமூகத்தின் கலாசார வளர்ச்சியை அறிய முடியும். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் பல்வேறு கலைகள் காலந்தோறும் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. தொன்று தொட்டு விளங்கக்கூடிய தமிழிசையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பாசுரங்கள் திருவாய்மொழி தமிழிசை மூவரின் பாடல்கள் மிக முக்கிய பங்களித்து தமிழிசை விளங்குகின்றது.

தமிழக அரசு தமிழ்நாட்டின் கலைகளுக்கும் பண்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. கலைகளில் மாணவர்கள் சிறந்து விளங்கும் வகையில் அரசு இசை கல்லூரிகளின் மூலம் பல்வேறு பாடப்பிரிவுகளில் கலைகளை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து வருகின்றன. சிறுவயதில் எந்த கலைகளில் திறமை உள்ளது என்பதை கண்டறிந்து, அக்கலைகளின் மீதான ஆர்வம் காரணமாகவும், தங்கள் திறமைகளை மேலும் வளர்க்கும் விதமாக, இசை கல்லூரிகளில் சேர்ந்து உயர் படிப்பு கற்கின்றார்கள். அரசும் அவர்களை பல்வேறு வகையில் ஊக்கமளித்து வருகின்றது.

இந்த வாய்ப்புக்களை மாணவர்கள் பயன்படுத்தி மேலும் உத்வேகத்துடன் திறமைகளை வளர்த்து இசை கலைகளில் சிறந்தவர்களாக வளரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.விழாவின் ஒரு பகுதியாக இன்று குரலிசை, பாரதநாட்டியம் நிகழ்ச்சியும், நாளை கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News