Loading . . .




வடமாநில தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் அப்செண்டால் தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி விமானம் மூலம் தொழிலாளர்களை அழைத்து வர தொழில்முனைவோர்கள் ஏற்பாடு

The Forecast 3 years ago கோவை

 கோவை, ஜுன் 3: கடந்த ஏப்ரல் மாதம் ஹோலி பண்டிக்கை மற்றும் வதந்தி காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளனர். எனினும் தொழில் நிறுவனங்களில் ஜாப் ஆர்டர்கள் அதிகரிப்பால் வடமாநில தொழிலாளர்கள் இன்றி பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு தொழில்களில் 5 லட்சம் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு கோவை ரயில் நிலையங்களில் குவிந்தனர். வதந்தி ஒரு புறம் இருக்க ஹோலி பண்டிகை கொண்டாடவும் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றனர்.

இதனிடையே பீகார், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீண்டும் கோவைக்கு 50 சதவீதம் தொழிலாளர்கள் பணிக்கு தற்போது திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு,குறு தொழில்கள் சங்க துணைத்தலைவர் சுருளி வேல் கூறுகையில்,

கோவையில் உள்ள பவுண்டரிகள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், பஞ்சாலைகள், பெரிய நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் தற்போது திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் வருகை குறைவினால் இங்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்றவாறு பணிகள் பிரித்து கொடுக்கப்படுகின்றன. 

ஜாப் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு நாங்கள் அனைத்து விதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கியிள்ளோம். அவர்களில் தற்போது 50 சதவீதம் பேர் திரும்பி வராதது வருத்தம் அளிக்கிறது. அவர்களிடையே அப்போது வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டனர் என பரவிய வதந்தி குறித்து அச்சம் இன்னும் இருக்கிறது. வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை விமானம் மூலம் அழைத்து வரவும் பல தொழில் முனைவோர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் பலரும் இங்கு உள்ள சம்பளத்தை வைத்து அவர்களது சொந்த ஊர்களில் வீடு கட்டியும், விவசாய நிலங்களை வாங்கியும் முன்னேறி வருகின்றனர். சிலர் விவசாயம் செய்து வருவதாலும் வர மறுக்கின்றனர்,’’ என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News