கோவை, ஜூலை 2: தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் சங்கத் தலைவர் சந்திர பிரகாஷ் கூறியதாவது:
குவாரி மற்றும் கிரசர்களில் போராட்டம் தொடர்பாக பல ஆயிரம் டிப்பர் லாரிகள், ஜேசிபி , பொக்லைன் போன்ற வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மாநில அளவில் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மோசமான சூழல் அதிகமாகிவிடும். உரிமம் பெறாத குவாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை உரிமம் பெற்ற குவாரிகள் மீதும் மேற்கொள்ளப்படுகிறது. அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு வாரத்தில் குவாரிகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழல் வந்து விடும். போராட்டம் நடத்தி காத்திருந்து தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல கோடி அபராதம் போடுகிறார்கள். திருச்சியில் குவாரி உரிமையாளர் பழனியாண்டி என்பவருக்கு ரூ.20 கோடி போடப்பட்டது. கரூரில் 4 குவாரிகளுக்கு ரூ. 45 கோடி அபராதம் போடப்பட்டது. ஒரு ஆட்டோக்காரருக்கு விதிமுறை மீறி விட்டார் என 50 லட்ச ரூபாய் அபராதம் போட்டால் அவர் எப்படி தொழில் செய்வார். குவாரி தொழிலில் இதுபோன்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இப்படி இருந்தால் குவாரிகளை அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை. அரசு இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது நிர்வாகிகள் அம்மாசையப்பன், செல்வராஜ் , நந்தகுமார், பழனிச்சாமி மற்றும் கிரஷர் , குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்.
0 Comments