Loading . . .




6 கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை இலக்காக சுமார் ரூ. 10கோடி நிர்ணயம்

The Forecast 2 years ago கோவை

கோவை, செப்.21- கோவை மாவட்டம், வ.உ.சி பூங்கா அருகில் உள்ள, மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை இன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி   குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை  தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு  தொடர் வேலைவாய்ப்பு நல்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு இரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு 30% அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 6  கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் ரூ.10கோடி விற்பனை  செய்ய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில்  உற்பத்தி செய்யப்பட்ட  பட்டு மற்றும் பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ரெடிமேடு சட்டைகள், சுடிதார் இரகங்கள் ஆர்கானிக்  சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் இரகங்கள் என ஏராளமானவைகள் விற்பனைக்காக  வைக்கப்பட்டுள்ளன .

பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் பெருக்கிட உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி   தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News